பெருந்தும்பை குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும். இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய், பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், இறையன்பர்களையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன. இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.