
Pen Bird
Product details
“இந்த உலகத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழிலையும் ஒருவனே செய்கிறான். அவனே உலக முதல்வன் என்று நாம் செயலினால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்று நீ சொல்வது ஏற்றுக்கொள்ள இயலாதது. அப்படி ஒருவன், கடவுள் என்னும் நிலையில் கிடையாது. அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கற்பிப்பதை எந்த வேதம் உனக்குக் கற்றுக்கொடுத்தது?” என்று இரணியன் கேட்டான்.
“முதன்மையான பரம்பொருள் ஒன்று, என்று ஒரு நூல் கூறினால் அதனை மறுத்துக் கூறுவதற்கும் இங்கே பல நூல்கள் தோன்றியுள்ளன. எல்லோரும் உன்னை உணர்ந்துகொள்ளாதபடி பல சமயங்களை நீயே உருவாக்கி இங்கே விளையாடுகிறாயோ?”
“பிரம்மனாலும் சிவனாலும்கூட உன்னை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. அவ்வாறு இருக்கும்போது என்னைப்போன்ற சிறியோரால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும். மரத்தின் கிளைகளில் இலை, பூ, கனி, காய் எனப் பல பொருள்கள் இருந்தாலும் அது ஒரு மரம் என்பதைப்போல், பல மதங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் நீதான் மூலம்” என்று பிரகலாதன் புகழ்ந்து வேண்டினான்.
***
“இந்த மண்ணிற்கும் விண்ணிற்கும் என்றைக்கு நான் தலைவன் ஆனேனோ அன்று முதல் அந்தப் பெயரைச் சொன்ன வாயையும் நினைத்த நெஞ்சையும் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்பது என் ஆணை. அந்த ஆணைப்படி யாரும் அந்தப் பெயரைச் சொல்வதும் இல்லை, சொல்ல நினைப்பதும் இல்லை. அப்படி இருக்கும்போது அந்தப் பெயரை நீ சொல்கிறாய் என்றால் திரை மறைவில் ஏதோ சதி இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இந்தப் பெயரைச் சொல்லும்படி உனக்குச் சொன்னவன் யார்?”
Similar products